மாயவன் 2-ம் பாகம் உருவாகிறது

மாயவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும், அதனை சிவி குமார் இயக்கி தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி ஆகியோர் நடிப்பில் 2017-ல் வெளியான படம் மாயவன். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ ஆசைப்படும் ஒரு விஞ்ஞானிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் மோதலே கதை. மாயவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து மாயவன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்களுக்கு பிடித்த மாயவன் நிலத்தில் இறங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ரசிகர்களின் ஆதரவினால் இந்த புதிய முயற்சியில் ஈடுபடுகிறோம். மாயவன் படத்தின் இரண்டாம் பாகம் மாயவன் ரீலோடட் ஆக தயாராக உள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுபோல் இன்று நேற்று நாளை, சூதுகவ்வும் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களையும், இதே பட நிறுவனம் படமாக்க உள்ளது. மாயவன் படத்தை சி.வி.குமார் இயக்கி இருந்தார். ஏற்கனவே பில்லா, எந்திரன், சண்டகோழி, சாமி, வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சிங்கம், காஞ்சனா படங்கள் மூன்று பாகங்களாக வந்துள்ளன. ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!