முதல் ஆளாக வாக்களித்தேன்… விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை – சமுத்திரகனி

படங்களில் சமூக கருத்துக்களை கூறும் சமுத்திரகனி ஓட்டு போடவில்லை என விமர்சனம் எழுந்த நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. திரையுலகினர் பலரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அதேசமயம் பல முக்கிய திரைப்பிரபலங்கள் ஓட்டளிக்கவில்லை என தகவல் பரவியது. அதில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. படங்களில் சமூக கருத்துக்களை கூறும் சமுத்திரகனி ஓட்டு போடவில்லை என விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், அவர் ஓட்டு போட்ட விரல் ‘மை’ அடையாளத்துடன் புகைப்படம் வெளியிட்டு குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், அதில் கூறியதாவது: “நானும், என் மனைவியும் காலை 6.55 மணிக்கே வாக்குச்சாவடிக்கு சென்றுவிட்டோம்.

ஆனால் ஓட்டுப் பதிவு செய்யும் இயந்திரத்தில் சிறு கோளாறு ஏற்பட்டதால், அதை சரிசெய்ய 40 நிமிடம் ஆனது. பின்பு முதல் ஆளாக ஓட்டு போட்டு விட்டு வந்தோம். வழக்கம் போல் நான் என் கடமையை சரியாக செய்துவிட்டேன். நான் ஓட்டு போட்டதை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!