கொரோனா தடுப்பு விதிகளை மீறிய பிரபல நடிகை – படங்களில் நடிக்க தடை விதிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் படப்பிடிப்புக்கு சென்ற நடிகையின் பொறுப்பற்ற செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் கவுஹர் கான். இந்தி படங்களிலும் நடித்து வரும் இவர் மும்பையில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் கவுஹர் கானுக்கு அறிவுறுத்தினர்.

ஆனால் நடிகை கவுஹர் கான், அதனை பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நடிகை கவுஹர் கானின் பொறுப்பற்ற செயலை கண்டித்துள்ள சினிமா ஊழியர்கள் கூட்டமைப்பு, அவர் அடுத்த 60 நாட்களுக்கு படங்களில் நடிக்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!