மீண்டும் சிஷ்யன் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் முந்தானை முடிச்சு. 1983-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் 38 வருடங்களுக்கு பின்னர் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் ஊர்வசி நடித்திருந்த கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜே.எஸ்.பி. சதீஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை சசிகுமாரின் சிஷ்யனும் பிரபல இயக்குனருமான எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க இருக்கிறார். இவர் இதற்கு முன் சசிகுமாரை வைத்து சுந்தரபாண்டியன் என்ற வெற்றி படத்தை கொடுத்தவர். மேலும் இவர்கள் கூட்டணியில் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!