நடிகர் அஜித் திடீரென போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தது ஏன்? – ருசீகர பின்னணி

நடிகர் அஜித் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தது ஏன் என்பது குறித்த ருசீகர பின்னணியை இந்த செய்தியில் காணலாம்.

நடிகர் அஜித் நேற்று பகல் திடீரென்று சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வாடகை காரில் வந்து இறங்கினார். முககவசத்துடன், அரைக்கால்சட்டை, டீ சர்ட் அணிந்து வந்த அவரை முதலில் யாரும் அடையாளம் காணவில்லை. ரைபிள் கிளப் எங்கே இருக்கிறது என்று அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீசாரிடம் அஜித் விசாரித்தார்.

உடனே போலீசார் அவரை அடையாளம் கண்டு கொண்டனர். கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆண், பெண் போலீசார் அனைவரும் அஜித்தை சூழ்ந்து கொண்டனர். பெரும் பரபரப்பானது. அஜித்தை சூழ்ந்து போலீசார் செல்போனில் செல்பி எடுத்து கொண்டனர்.

பின்னர் எழும்பூரில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் துப்பாக்கிசுடும் பயிற்சி மையத்திற்கு (ரைபிள் கிளப்) அஜித் புறப்பட்டு சென்றார். அங்கு செல்வதற்கு பதிலாக அஜித், வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்துவிட்டது தெரியவந்தது.

அவர் வந்த வாடகை கார் டிரைவர், கமிஷனர் அலுவலகம் போக வேண்டும் என்று சொன்னவுடன், அவரை இங்கு அழைத்து வந்துவிட்டாராம். பழைய கமிஷனர் அலுவலகம் செல்வதற்கு பதிலாக, நடிகர் அஜித் புதிய கமிஷனர் அலுவலகம் வந்த சம்பவம், நேற்று ருசிகர தகவலாக சமூக வலைத்தளங்களில வைரலானது. அஜித் ரைபிள் கிளப்பில் உறுப்பினர் ஆவார். அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சியில் பங்கேற்க வந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!