மீண்டும் சிம்புவுடன் இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்புவுடன் பிரபல நடிகை ஒருவர் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தினத்துக்கு வெளியானது ஈஸ்வரன். அடுத்ததாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு, ‘ஜில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘பத்து தல’ படத்தில் நடிக்கிறார்.

இப்படங்களைத் தொடர்ந்து, கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கான முதல் கட்டப் பணிகளைத் துவங்கிவிட்டார் கெளதம் மேனன்.

சிம்பு – கெளதம் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது. முதல்கட்டமாக, சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என்று சொல்லப்பட்டது. நயன்தாரா – சிம்பு கூட்டணியில் வல்லவன் மற்றும் இதுநம்ம ஆளு படங்கள் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் சிம்பு படத்தில் நடிக்க நயன்தாராவை படக்குழு அணுகியது. நயன்தாரா நடிக்க ஒப்புக் கொள்ளாததால் ஏற்கெனவே சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்த திரிஷாவை மீண்டும் ஜோடியாக்க பேசி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!