தமிழகத்தில் நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில்…. பாலாபிஷேகம் செய்து வழிபட்ட ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகையான நிதி அகர்வாலுக்கு, தமிழகத்தில் ரசிகர்கள் கோவில் கட்டி பாலாபிஷேகம் செய்து உள்ளனர்.

தெலுங்கு நடிகையான நிதி அகர்வால், ஜெயம் ரவியின் பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். அவர் தமிழில் நடித்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீசானது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில், நடிகை நிதி அகர்வாலுக்காக தமிழ்நாட்டில் ரசிகர்கள் கோவில் கட்டி உள்ளனர். காதலர் தினமான நேற்று அவரது சிலைக்கு பால் அபிஷேகம் செய்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நடிகை நிதி அகர்வால் கூறியதாவது: இது எனக்கு மிகவும் அதிர்ச்சி அளித்தது. நான் இதை எதிர்பார்க்கவில்லை. நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். இதைவிட சிறந்த காதலர் தின பரிசு இருக்க முடியாது. என் மீது இவ்வளவு அன்பு காட்டும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!