புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படும் தவசிக்கு உதவிக்கரம் நீட்டிய சிவகார்த்திகேயன், சூரி

புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படும் தவசிக்கு, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் நிதியுதவி வழங்கி உள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்தவர் தவசி. அப்படத்தில் சூரியின் தந்தையாக நடித்திருந்த அவர், கருப்பன் குசும்புக்காரன் என்கிற ஒற்றை வசனம் மூலம் பிரபலமானவர். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் தவசி நடித்துள்ளார்.

தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பெரிய மீசையும், தாடியுமாய் கம்பீர குரலுடன் இருப்பது தான் அவரின் அடையாளமே. ஆனால் அவர் தற்போது மொட்டை அடித்து எலும்பும், தோலுமாக இருப்பது காண்போரை கண்கலங்க செய்தது.

தவசிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். பா.சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்நிலையில், தவசியின் உடல்நிலை குறித்து தகவல் அறிந்த நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி அவருக்கு நிதியுதவி அளித்துள்ளனர். நடிகர் சூரி முதற்கட்டமாக 20 ஆயிரம் ரூபாயும், சிவகார்த்திகேயன் 25 ஆயிரம் ரூபாயும் வழங்கியுள்ளனர். மேலும் நிதியுதவி தேவை என்றால் தங்களை தாராளமாக கேட்கலாம் என தவசியின் குடும்பத்தினரிடம் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!