கார்த்தி அடுத்த படத்தின் புதிய அறிவிப்பு… இசையமைப்பாளர் யார் தெரியுமா?

சுல்தான் படத்தை அடுத்து கார்த்தி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

ரெமோ’ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘சுல்தான்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பொன்னம்பலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே ‘சுல்தான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்ததாக இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜார்ஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

தீபாவளியை முன்னிட்டு இந்த அறிவிப்பை இப்படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!