விசுவின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு

இயக்குனர் விசு இயக்கி நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விசு நடித்து இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்ற திரைப்படம் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தேசிய விருது, பிலிம்பேர் விருதையும் பெற்றது. இந்த நிலையில் தற்போது விசுவின் மரணத்திற்கு பின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இயக்குனர்‌ விசு எழுதி இயக்கிய ஏவிஎம்‌ சம்சாரம்‌ அது மின்சாரம்‌: தேசிய விருது பெற்ற மாபெரும்‌ வெற்றி படம்‌. நீண்ட இடைவெளிக்கு பிறகு மறைந்த இயக்குனர்‌ விசு அவர்கள்‌ கடைசியாக கதை திரைக்கதை வசனம்‌ எழுதியுள்ள சம்சாரம்‌ அது மின்சாரம்‌ 2′ அவரின்‌ லட்சிய படைப்பு. இப்படத்தை “மக்கள்‌ அரசன்‌ பிக்சர்ஸ்‌” நிறுவனர்‌ திரு.ராஜா அவர்கள்‌ தயாரிக்கிறார்‌. இந்நிறுவனம்‌ விமல்‌ நடிக்கும்‌ “எங்கள்‌ பாட்டன்‌ சொத்து”, விதார்த்‌, யோகிபாபு நடிக்கும்‌ “உலகமகா உத்தமர்கள்‌”, பா.விஜய்‌ இயக்கத்தில்‌ ஜீவா அர்ஜுன்‌ நடிக்கும்‌ “மேதாவி” போன்ற படங்களை தயாரித்து வருகிறது.

சம்சாரம்‌ அது மின்சாரம்‌ – 2 திரைப்படத்தை விசுவின்‌ சிஷ்யன்‌ வி.எல்‌.பாஸ்கர்ராஜ்‌ இயக்குகிறார்‌. இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையும், பா விஜய் பாடல்களும், ராஜவேல் மோகன் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர். மேலும் இந்த படத்தின் உதவி வசனகர்த்தாவாக விசுவின்‌ மகள்‌ லாவண்யா விசு பணியாற்றுகிறார்‌.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!