கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை

போதைப்பொருள் விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் கஞ்சா வாங்கியபோது பிடிபட்டுள்ளார்.

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக இந்தி நடிகையும், மரணமடைந்த சுஷாந்த் சிங் காதலியுமான ரியா சக்கரவர்த்தி கைதானார். ரியாவின் சகோதரர் சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டா ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, ஷரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோர் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டனர்.

இதேபோல் கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரும் போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகையையும் கைது செய்துள்ளனர். அவரின் பெயர் பிரீத்திகா சவுகான். இவர் சி.ஐ.டி, தேவோ கே தேவ் மகாதேவ், சாவ்தான் இந்தியா, ஹனுமான் உள்பட பல டி.வி. சீரியல்களில் நடித்து இருக்கிறார். மும்பையில் ஒருவரிடம் இருந்து கஞ்சா வாங்கியபோது பிரீத்திகா சவுகானை போலீசார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகள் அடுத்தடுத்து கைதாவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!