மோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்

கார் வாடகை கொடுக்காமல் ஏமாற்றியதாக வந்த புகாருக்கு நடிகை முமைத்கான் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

பிரபல கவர்ச்சி நடிகை முமைத்கான். இவர் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற நெருப்பே, சிக்குமுக்கி நெருப்பே பாடலுக்கும் விஜய்யின் போக்கிரி படத்தில் இடம்பெற்ற என் செல்லப்பேரு ஆப்பிள் பாடலிலுக்கும் நடனம் ஆடி உள்ளார். விக்ரமின் கந்தசாமி படத்தில் இடம்பெற்ற என்பேரு மீனா குமாரி பாடலுக்கும் ஆடி உள்ளார். இவர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் முமைத்கான் மீது கார் டிரைவர் ஒருவர் மோசடி புகார் கூறினார். கோவாவுக்கு தனது வாடகை காரில் பயணித்து 8 நாட்கள் தங்கியதாகவும் வீடு திரும்பியதும் வாடகை ரூ.15 ஆயிரத்தை தராமல் சென்று விட்டார் என்றும் தெரிவித்தார். இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பானது.

இதையடுத்து ஐதராபாத் மேற்கு பகுதியில் உள்ள புஞ்சகட்டா போலீசில் கார் டிரைவர் மீது முமைத்கான் புகார் அளித்தார். அதில், டிரைவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தபிறகும் என்மீது பொய்யான குற்றச்சாட்டு சொல்லி அவதூறு செய்து இருப்பதாக கூறியுள்ளார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறும்போது, ‘புகார் தொடர்பாக இருவரிடமும் விசாரித்து உண்மை கண்டறியப்படும்’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!