தான் நடித்த படத்திற்கே பிளாக்கில் டிக்கெட் விற்ற சென்ராயன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சென்ராயன், தான் நடித்த படத்திற்கு தானே பிளாக்கில் டிக்கெட் விற்றதாக கூறியுள்ளார்.

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் சென்ராயன். தொடர்ந்து ‘சிலம்பாட்டம்’ , ‘ஆடுகளம்’, ‘மூடர் கூடம்’ என பல படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றார். தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் தான் நடித்த படத்துக்கு தானே பிளாக்கில் டிக்கெட் விற்றது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும அவர் கூறியதாவது: “பொல்லாதவன் படத்தில் நடிக்கும் போது நான் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் 200 டிக்கெட்டுகளை தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வாங்கியிருந்தார்.

ஆனால் படம் ரிலீசாகும் தேதியன்று குடும்ப பிரச்சனை காரணமாக அவர் திடீரென ஆந்திரா செல்ல நேரிட்டதால், அந்த டிக்கெட்டுகள் அனைத்தையும் என்னிடம் கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்த்துக் கொள் என கூறிவிட்டு சென்றார்.

இதையடுத்து காசி தியேட்டருக்கு எனது நண்பர்களுடன் சென்றேன். எனக்கும் எனது நண்பர்களுக்கும் போக மீதி இருக்கும் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்றேன். தான் நடித்த படத்தின் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்ற ஒரே நடிகன் நானாக தான் இருப்பேன். அந்த பெருமை எனக்கு உண்டு” என்று சென்ராயன் கூறியுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!