திடீரென திரிஷா ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்? – குழப்பத்தில் ரசிகர்கள்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவின் திடீர் முடிவு ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.

தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்தாண்டு மலையாளத்திலும் அறிமுகமானார். இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் வீட்டிலேயே இருக்கும் திரிஷா, சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். விழிப்புணர்வு ஏற்படுத்துவது, டிக்டாக் வீடியோ பதிவிடுவது என சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார்.

கடந்த ஜூன் மாதம் சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகினார். இதையடுத்து சில வாரங்களுக்கு பின் மீண்டும் சமூக வலைதளத்தில் அவர் இணைந்தாலும், போட்டோ, வீடியோ பதிவிடுவதை குறைத்துக்கொண்டார்.

இந்நிலையில், நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அனைத்து பழைய பதிவுகளையும் நீக்கி இருக்கிறார். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 7 புகைப்படங்கள் மட்டுமே இருக்கின்றது. இதுதவிர மற்ற பழைய புகைப்படங்கள் அனைத்தையும் திடீரென நீக்கிவிட்டார். அதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!