400-வது படத்தில் மன்னராக களமிறங்கும் சந்தானம்

காமெடியனாக இருந்து ஹீரோவாக உயர்ந்துள்ள சந்தானம், தனது 400-வது படத்தில் மன்னர் வேடத்தில் நடித்துள்ளார்.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் பிஸ்கோத். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறியதாவது: “இது சந்தானத்தின் 400-வது படம். 18-ம் நூற்றாண்டு உள்பட மூன்று காலகட்டங்களில் நடப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. சரித்திர காலத்து கதையில் ராஜசிம்மன் என்ற மன்னர் வேடத்தில் சந்தானம் நடித்துள்ளார். சரித்திர காலத்து ஆடைகள், பல்லக்கு, வாள், கத்தி போன்றவை பயன்படுத்தப்பட்டு உள்ளன. படத்தில் 30 நிடங்கள் இந்த காட்சிகள் இடம்பெறும்.

இதற்காக 500 நடிகர், நடிகைகள் சரித்திர கால உடை அணிந்தே நடித்துள்ளனர். பிஸ்கோத் படத்தில் சந்தானம் 3 வேடங்களில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்கும் படமாக தயாராகி உள்ளது. வடிவேலுக்கு இம்சை அரசன் போல், சந்தானத்துக்கு பிஸ்கோத் படம் அமையும். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படம் திரையரங்குகளில் வெளியிடப்படும். கொரோனா அழுத்தத்தில் இருந்து மக்களை மீட்டு, மகிழ்ச்சியான மனநிலைக்கு மாற்றுவதாக இந்த படம் இருக்கும்” என அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!