உருவாகிறது ‘பிச்சைக்காரன் 2’… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய் ஆண்டனி

இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய் ஆண்டனி, அடுத்ததாக பிச்சைக்காரன் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து 2016-ல் வெளியான படம் பிச்சைக்காரன். கதாநாயகியாக சாட்னா டைட்டஸ் நடித்து இருந்தார். இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டு ஆந்திராவிலும் வசூல் குவித்தது. விஜய் ஆண்டனிக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் கொடுத்தது.

இந்த நிலையில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி தெரிவித்து இருந்தார். முதல் பாகத்தை இயக்கிய சசி வேறு படவேலைகளில் இருப்பதால் இரண்டாம் பாகத்தை இயக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று விஜய் ஆண்டனியின் பிறந்த நாளையொட்டி அவரது புதிய படம் பற்றிய அறிவிப்பையும் இயக்குனர் விவரமும் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி அவரது புதிய படம் பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் என்றும் இந்த படத்தை பாரம் படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமி இயக்க உள்ளார் என்பதையும் அறிவித்துள்ளனர். மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!