கந்தசஷ்டி கவசம் விவகாரம்…. பேசிப் பேசி யாரையும் பெரிய ஆள் ஆக்காதீங்க – லாரன்ஸ் டுவிட்

கந்தசஷ்டி கவசம் குறித்து நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக நடிகர்கள் நட்ராஜ், பிரசன்னா, சௌந்தரராஜா, ராஜ் கிரண் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்,நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: அனைத்து முருக பக்தர்களுக்கும் வணக்கம், நான் உங்கள் அனைவருடனும் ஒரு கருத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தினமும் கந்தசஷ்டி கவசத்தை கேட்டு வளர்ந்தவன் நான். என் அம்மா அதை தினமும் என்னிடம் காலையில் படித்துக் காட்டுவார். அதன் சக்தியை நான் உணர்ந்துள்ளேன். கந்தசஷ்டி கவசம் என்னைப் பாதுகாத்த ஒரு கேடயம் என்பதை நான் நம்புகிறேன்.

என் வீட்டில் உள்ள முருகன் சிலையை நான் தினமும் வணங்குவேன். நான் இதை எதற்காக சொல்கிறேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் அதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதைப் பற்றி அதிகமாகப் பேசி யாரையும் பெரிய ஆளாக மாற்ற வேண்டாம். இந்த புகைப்படத்தில் முருகனின் அழகு, அன்பு மற்றும் சக்தியை பாருங்கள். அதற்கு முன் எல்லாம் மறைந்து போகும். அனைத்திற்கும் காலம் பதிலளிக்கும். இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!