மிரட்டலான தோற்றத்துடன் வெப் தொடரில் அறிமுகமாகும் சரத்குமார்

‘பேர்ட் ஆப் பிரே த ஹண்ட் பிகின்ஸ்’ என்கிற வெப் தொடரில் நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால், பரத், பாபி சிம்ஹா, மீனா, நித்யா மேனன், சீதா ஆகியோர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் சரத்குமாரும் வெப் தொடரில் நடிக்கிறார். இதனை நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைதளத்தில் தெரிவித்து உள்ளார். வெப் தொடரில் நடிக்கும் சரத்குமாரின் தோற்றங்களையும் வெளியிட்டு உள்ளார். அதில் சரத்குமார் நீளமான தாடி, கையில் துப்பாக்கியுடன் மிரட்டலான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார்.

இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகின்றன. சரத்குமார் நடிக்கும் வெப் தொடருக்கு ‘பேர்ட் ஆப் பிரே த ஹண்ட் பிகின்ஸ்’ என்று பெயர் வைத்துள்ளனர். கவுதம் மேனன் உதவியாளர் பிரவீன் நாயர் இயக்குகிறார். சரத்குமாருடன் இணைந்து நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.

கொரோனா ஊரடங்கு முடிந்ததும் ஐதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த தொடரை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரிக்கிறது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், ஏ.வேங்கடேஷ் இயக்கும் பாம்பன் ஆகிய படங்களிலும் சரத்குமார் நடிக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!