அவர்கள் இருவரால் மன உளைச்சலுக்கு ஆளானேன் – வனிதா

செய்தியாளர்களை சந்தித்த நடிகை வனிதா, அவர்கள் இருவரால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக பேட்டியளித்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த மாதம் 27-ம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், பீட்டர் பால் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக போலீசில் புகாரளித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை வனிதா, சூர்யா தேவி என்பவர் தொடர்ந்து தன் மீது அவதூறு பேசி வீடியோ வெளியிட்டு வருவதாக போரூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாரளித்திருந்தார். தற்போது மீண்டும் சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீது போலீசில் புகாரளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னைப் பற்றி சூர்யா தேவி என்பவர் யூடியூப் சேனலில் ஆபாசமாகவும் தவறாகவும் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். பணம் சம்பாதிக்க இது போல செய்து வருகிறார். போரூர் போலீசில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தேன். சூர்யா தேவி மற்றும் படத்தயாரிப்பாளர் ரவீந்திரன் சேர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர்.

இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. சினிமா தொடர்புடையவர்கள் என்னுடைய விஷயத்தில் தலையிடாதீர்கள். ஆதரவு இல்லாத பெண்களை குறிவைத்து அந்த 2 பேரும் அவதூறு பரப்புகிறார்கள். இந்த விஷயத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!