சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் – குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்

சாத்தன்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இருவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் குடும்பத்தினருக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ஜெயராஜின் மனைவி, மகளை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார். இந்த தகவலை கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!