அஜித் கொடுத்த அசத்தல் ஐடியா…. கொரோனா தடுப்பு பணியில் களமிறங்கிய தக்‌ஷா குழு

அஜித்தின் அறிவுறுத்தலின் படி தக்‌ஷா குழு, சிவப்பு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் களமிறங்கி உள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலர் இரவு பகல் பாராது பணியாற்ற வருகின்றனர். கொரோனா தடுப்பு பணியின் ஒருபகுதியாக அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. கிருமிநாசினி தெளித்து வரும் தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் யோசனையை நடிகர் அஜித் வழங்கியதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். சிவப்பு மண்டலங்களில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினிகளை தெளிக்க நடிகர் அஜித்தின் அறிவுறுத்தலின் படி தக்‌ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், திருநெல்வேலி மாவட்டத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போது அதிக திறன் கொண்ட ட்ரோன்களை வடிவமைக்க அஜித், தக்‌ஷா குழுவுக்கு ஆலோசனை வழங்கினாராம். அதன்படி தற்போது 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட கிருமி நாசினியை சுமந்து செல்லும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள ட்ரோன், சுமார் 30 நிமிடத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கிருமி நாசினி தெளிக்கும் திறன் கொண்டதாம். சென்னையில் நடத்தப்பட்ட இதன் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. அந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!