தன் வீட்டில் இருந்த சீன தயாரிப்பு பொருட்களை தீ வைத்து எரித்த பிரபல இயக்குனர்

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘பேய் மாமா’ என்ற படத்தை இயக்கி வரும் இயக்குனர் சக்தி சிதம்பரம், தன் வீட்டில் இருந்த சீன தயாரிப்பு பொருட்களை தீ வைத்து எரித்துள்ளார்.

சார்லி சாப்ளின், கோவை பிரதர்ஸ், இங்கிலீஸ்காரன், மகாநடிகன் உள்பட பல படங்களை இயக்கியவர், சக்தி சிதம்பரம். இப்போது யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘பேய் மாமா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் நேற்று இரவு தன் வீட்டில் இருந்த சீன தயாரிப்பு பொருட்களை தீவைத்து எரித்தார். சீனா தயாரித்த டேப் ரிக்கார்டர்கள், செல்போன்கள், மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை தீவைத்து கொளுத்தினார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: “இந்திய வீரர்கள் 20 பேர்களை கொன்று மிரட்டிக் கொண்டிருக்கும் சீனா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். அது தயாரித்த பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது. அதற்கு நாமே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக சீன தயாரிப்பு பொருட்களை தீவைத்து எரித்தேன்.

என் வாழ்நாளில் இனிமேல் சீன தயாரிப்புகளை பயன்படுத்த மாட்டேன். நான் இப்போது இயக்கி வரும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் உள்பட படக்குழுவினர் அனைவரிடமும் சீன தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தாதீர்கள். எரித்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.” இவ்வாறு இயக்குனர் சக்தி சிதம்பரம் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!