ஆபாசமாக திட்டிய நெட்டிசனை தேடிப்பிடித்து நூதன தண்டனை கொடுத்த நடிகை

சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நெட்டிசனை, நடிகை அபர்ணா நாயர் போலீஸ் மூலம் தேடிப்பிடித்து நூதன தண்டனை கொடுத்துள்ளார்.

தமிழில் ‘எதுவும் நடக்கும்‘ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அபர்ணா நாயர். மலையாளத்தில், ரன் பேபி ரன், கல்கி, மல்லுசிங், ஹோட்டல் கலிபோர்னியா உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரசிகர் ஒருவர் அபர்ணா நாயரை ஆபாசமாகவும் மோசமாகவும் சித்தரித்து வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டார். தன்னை கொச்சைப்படுத்தியவர் பெயரையும் அவரது முகநூல் பக்கத்தையும் வலைத்தளத்தில் குறிப்பிட்டு அபர்ணா நாயர் கண்டித்தார்.

இது உன்னை போன்றவர்களின் பாலியல் ஆசைகளை தீர்த்துக்கொள்ளும் தளம் அல்ல. உனது வக்கிரமான ஆசைகளை நான் தீர்த்து வைப்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். உனக்கு ஒரு மகள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார். உனக்கு 30 வினாடி சந்தோஷத்தை கொடுப்பதற்காக நான் இங்கு இல்லை.” என்றெல்லாம் சாடினார். அவர் மீது சைபர் கிரைம் போலீசிலும் புகார் செய்தார். போலீசார் அந்த நபரை பிடித்து வைத்து அபர்ணா நாயருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஏன் இப்படி வக்கிரமாக பேசினாய் என்று அந்த நபரை எச்சரித்ததாக அபர்ணா வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த நபரிடம் இனிமேல் எந்த பெண்ணுக்கும் அப்படி செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கியதாகவும் அவரது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு புகாரை வாபஸ் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!