சுஷாந்த்தின் தற்கொலை முடிவுக்கு காரணம் இதுதான் – கங்கனா பரபரப்பு குற்றச்சாட்டு

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங்கின் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 34 வயதாகும் சுஷாந்தின் திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பேசியுள்ளதாவது: ‘ பாலிவுட் திரையுலகம் சுஷாந்தை முறையாக நடத்தவில்லை. அவருக்கு போதிய திறமை, நல்ல நடிப்பு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள் கொடுத்த போதிலும், திரையுலகம் அவருக்கு முறையான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை.

அவரது முதல் திரைப்படமான கை போ சேவில் அவரது நடிப்பு ஏன் பெரிய அளவில் பேசப்படவில்லை? அவர் இறுதியாக நடித்த சிச்சோரே போன்ற ஒரு அற்புதமான படம் புறக்கணிக்கப்பட்டு, கல்லி பாய் போன்ற மோசமான படத்திற்கு அனைத்து விருதுகளும் வழங்கப்பட்டது ஏன்?

அதே போல் என்னுடைய படைப்புகளையும் ஆதரிக்க மறுப்பது ஏன்? சமூக வலைதளங்களில் சுஷாந்த் பற்றி தொடர்ந்து தவறான கருத்துக்களை முன்வைக்கப்பட்டு வந்தன. திறமை இல்லை என தன்னைப்பற்றி மற்றவர்கள் சொன்னதை சுஷாந்த் நம்பியது மட்டுமே அவர் செய்த மிகப்பெரிய தவறு’ என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!