படுக்கைக்கு சம்மதிப்பதால் மும்பை நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன – தேஜஸ்வி பகீர் குற்றச்சாட்டு

படுக்கைக்கு சம்மதிப்பதால் மும்பை நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருவதாக தெலுங்கு நடிகை தேஜஸ்வி பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘நட்பதிகாரம் 79‘ எனும் படத்தில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடா. ஆந்திராவை சேர்ந்த இவர் தெலுங்கில் மனம், ஹார்ட் அட்டாக், ஸ்ரீமந்துடு, சுப்ரமணியம் பார் சேல் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: “நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பெண்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் சினிமாவில் நடக்கின்றன. நானும் அந்த பிரச்சினையை எதிர்கொண்டேன். இதனால் சினிமாவை விட்டே விலக நினைத்தேன். பல நடிகைகள் இதனை எதிர்கொள்கின்றனர்.

சினிமா துறையில் 90 சதவீதம் இந்த பிரச்சினை உள்ளது. மும்பை நடிகைகள் பட வாய்ப்புகளை பெறுவதற்காக மனரீதியாக இதற்கு உடன்பட தயாராகி விடுகிறார்கள். இதனால் தான் அவர்களுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன. தென்னிந்திய நடிகைகள் பிகினி உடை, முத்தகாட்சி போன்றவற்றில் நடிக்கவே கூச்சப்படுகின்றனர். சினிமா பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது தென்னிந்திய நடிகைகளுக்கு தெரியும். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிப்பது இல்லை.

நான் ஒருவரை காதலித்தேன். திருமணத்துக்கும் தயாரானோம். அதன்பிறகு சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதை அறிந்து காதலை முறித்து என்னை திருமணம் செய்து கொள்ள அந்த நபர் மறுத்துவிட்டார். படுக்கைக்கு அழைப்பதை சினிமாவில் இருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். தேஜஸ்வியின் குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!