பேட்ட வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி

ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக்கிற்கு அவரது மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

பிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக். இந்தி திரையுலகின் தவிர்க்க முடியாத சிறந்த நடிகர். மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் தாக்கரே படத்தில் பால்தாக்கரே வேடத்திலும், ரஜினியின் பேட்ட படத்தில் வில்லானாகவும் நடித்து உள்ளார். நடிகர் நவாசுதீன் சித்திக்கின் முதல் மனைவி ஷீபா.

இவருடனான நவாசுதீன் சித்திக்கின் திருமண வாழ்க்கை குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது. இதையடுத்து அவர் இரண்டாவதாக ஆலியா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், நவாசுதீன் சித்திக்- ஆலியா தம்பதியின் இல்லற வாழ்வில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நவாசுதீன் சித்திக்கிடம் விவாகரத்து மற்றும் பராமரிப்பு தொகை கேட்டு ஆலியா வக்கீல் அபய் சஹாய் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு மத்தியில் விரைவு தபால் வசதி கிடைக்காததால் அவருக்கு இந்த விவாகரத்து நோட்டீஸ் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நோட்டீஸ் தொடர்பாக நடிகர் நவாசுதீன் சித்திக் இன்னும் பதிலளிக்கவில்லை என்று வக்கீல் அபய் சஹாய் கூறினார். இதுபற்றி ஆலியா கூறும்போது, ‘விவாகரத்து கோரி இருப்பது உண்மைதான். அதற்கு ஒரு காரணம் அல்ல, பல காரணங்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே கடுமையானவை’ என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!