கொரோனாவால் ஆஸ்கார் விருது விழா தள்ளிவைப்பு?

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருவதால், ஆஸ்கார் விருது விழா தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனாவால் ஹாலிவுட் முதல் அனைத்து திரையுலகமும் முடங்கி கிடக்கிறது. திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் படங்களை ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்து வருகின்றனர். ஆஸ்கார் விருதுக்கு ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களும் அனுமதிக்கப்படும் என்று விதிகளை தளர்த்தி ஆஸ்கார் குழு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு முன்பு திரையரங்குகளில் குறைந்தபட்சம் ஒருவாரம் திரையிட்ட படங்கள் மட்டுமே ஆஸ்காருக்கு தகுதி பெற்றன. அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனாவால் விருது வழங்கும் விழாவை தள்ளிவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன்படி ஜூன் அல்லது ஜூலையில் விழாவை நடத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு மாதங்கள் தள்ளி வைத்து ஜூன் அல்லது ஜூலையில் நடத்த முடிவு செய்து இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. கடந்த 93 ஆண்டுகளில் ஆஸ்கார் விருது விழா இதுவரை தள்ளிவைக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா அச்சுறுத்தலால் பல ஹாலிவுட் படங்களின் ரிலீசை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளனர். இதன்காரணமாகவே ஆஸ்கார் விருது வழங்கும் விழா தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!