வேறு வழியில்லை…. நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் – தயாரிப்பாளர் வற்புறுத்தல்

கொரோனாவால் சினிமா துறையில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்ய, நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என பிரபல தயாரிப்பாளர் வற்புறுத்தி உள்ளார்.

கொரோனாவால் திரையுலகம் பாதித்துள்ளது. படப்பிடிப்புகள் நின்று போனதால் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டர்களுக்கு முன்புபோல் ரசிகர்கள் வருவார்களா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மலையாள நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று கேரள முன்னணி தயாரிப்பாளர் சுரேஷ் குமார் வற்புறுத்தினார்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ராணாவின் தந்தையும், நடிகர் வெங்கடேசின் அண்ணனுமான பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவும் தெலுங்கு நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “கொரோனா ஊரடங்கினால் தெலுங்கு பட உலகில் இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. பல நிறுவனங்கள் சம்பளத்தை குறைத்துள்ளன. அதுபோல் தெலுங்கு சினிமாவிலும் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படும்” என்றார்.

தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, பாலகிருஷ்ணா, பிரபாஸ், ராணா, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!