கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம் வைத்து கொடுத்தது உண்மையா? – அமீர்கான் விளக்கம்

கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம் வைத்து அமீர்கான் ஏழை மக்களுக்கு கொடுத்ததாக செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு சல்மான்கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் உளிட்ட பல இந்தி நடிகர்-நடிகைகள் உதவி வருகிறார்கள். இதனிடையே நடிகர் அமீர்கான். ஏழைகளுக்கு தலா ஒரு கிலோ கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம் பணம் வைத்து நூதனமான முறையில் நிவாரணம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்திகள் பரவின.

இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்துவந்த அமீர்கான். தற்போது டுவிட்டரில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “கோதுமை பாக்கெட்டுக்குள் பணம் வைத்துக் கொடுக்கும் மனிதன் நானல்ல. அது முற்றிலும் போலியான தகவலாக இருக்கலாம் அல்லது அதை செய்த ராபின் ஹுட் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள கூடாது என விருப்பப்பட்டிருப்பார்” என பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!