லாரன்ஸின் அடுத்த அதிரடி…. அம்மா உணவகத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி

அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிப்பதற்காக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. திரைப்பிரபலங்கள் பலர் நிதி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், இயக்குனருமான லாரன்ஸ் பெப்சிக்கு ரூ.50 லட்சம் வழங்கினார்.

இதுதவிர பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கினார். மேலும் நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சம் என முதலில் ரூ.3 கோடி வழங்கினார். அண்மையில் துப்புரவு பணியாளர்களுக்கு உதவும் பொருட்டு தனது அடுத்த பட சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.

இதுமட்டுமில்லாமல், விநியோகஸ்தர் சங்கத்திற்கு ரூ.15 லட்சம், நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் என தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வந்த லாரன்ஸ், தற்போது சென்னை கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களிலுள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிப்பதற்காக ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!