நடிக்க அழைத்த ரஜினி மகள்… மறுப்பு தெரிவித்த மணிரத்னம் – காரணம் இதுதானாம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் தன்னை நடிக்க அழைத்ததாகவும், அவரது படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்தும் இயக்குனர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இவர் தளபதி, நாயகன், ரோஜா, அலைபாயுதே என காலம் தாண்டி பேசும் பல காவியங்களை கொடுத்துள்ளார். மணிரத்னத்தின் படங்களை பார்த்தும் அவரது படங்களால் ஈர்க்கப்பட்டும் சினிமா துறைக்கு வந்தவர்கள் ஏராளம். தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் மணிரத்னம் என்றே சொல்லலாம்.

தற்போது இவர் பொன்னியின் செல்வன் படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்கி வருகிறார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் இருக்கும் மணிரத்னம், நேற்று தனது மனைவி சுஹாசினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, ரசிகர் ஒருவர், ஏன் நீங்கள் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை, யாரேனும் உங்களை நடிக்க அணுகினார்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மணிரத்னம், “ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா நடிக்க அழைத்தார். நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஏனென்றால், நான் நடித்திருந்தால், அதன் பிறகு மீண்டும் படம் இயக்கும்போது மற்ற நடிகர்கள் ‘நான் பார்த்தேனே நீங்க நடிச்ச அழக’ என சொல்லிவிடுவார்கள். எதுக்கு வம்புனு நான் நடிக்கல” என மணிரத்னம் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!