ஷாருக்கான் பட தயாரிப்பாளருக்கு கொரோனா

2 மகள்களை தொடர்ந்து பிரபல இந்தி பட தயாரிப்பாளர் கரீம் மோரானிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

பிரபல இந்தி பட தயாரிப்பாளர் கரீம் மோரானி. இவர் நடிகர் ஷாருக்கானை வைத்து ரா ஒன், சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே போன்ற படங்களை தயாரித்தவர். கடந்த சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளரின் மகள்கள் ஷோயா மற்றும் சாஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதில் ஷோயா ராஜஸ்தான் சென்று திரும்பியதும், சாஷா இலங்கை சென்று திரும்பியதும் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் கரீம் மோரானிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று தெரியவந்தது. இதுகுறித்து தயாரிப்பாளரின் சகோதரர் முகமது மோரானி கூறுகையில், ‘‘பரிசோதனைக்கு பிறகு கரீமுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. சோதனை முடிவுகள் நேற்று காலை தான் வந்தன. அவர் நானாவதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். கரீமின் மனைவி மற்றும் வீட்டில் வேலை பார்க்கும் மற்ற ஊழியர்களுக்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது’’ என்றார்.

இந்தி திரையுலகில் முதலில் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது அவர் அதில் இருந்து குணமாகிவிட்டார். அவரை தொடர்ந்து நடிகர் புரப் கோலி, கரீம் மோரானி மற்றும் அவரது மகள்கள் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது இந்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!