மறுதேர்தல் நடத்த நடிகர் சங்கத்தில் பணமில்லை – கருணாஸ்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்த பணம் இல்லை என நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற நாடக நடிகர் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்ட நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியாவது: நடிகர் சங்க சொத்து என்பது தனி நபருடைய சொத்தல்ல. அதற்கு தனிப்பட்ட நபர்கள் யாரும் உரிமை கொண்டாட முடியாது. மீண்டும் நடிகர் சங்கத் தேர்தல் அறிவிக்கும் போது தான் ஏற்கனவே எங்கள் அணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடுவார்களா என்று தெரியவரும். நான் பதவி வெறி பிடித்தவன் அல்ல.

பதவிக்காக எத்தனை லட்சங்கள் வேண்டுமானாலும் செலவு செய்வதற்கு நான் ஒன்றும் முட்டாளும் இல்லை. தற்போது சங்கமே முடங்கி போயுள்ளது. சங்கத்தில் பணமும் இல்லை. நீதிமன்றம் மறுபடியும் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சொன்னாலும் தேர்தலை நடத்துவதற்கு சங்கத்தில் பணம் இல்லை’. இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!