தனுஷின் 43-வது படத்தை இயக்கப்போவது இவர்தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், அடுத்ததாக இளம் இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அந்த படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

இதைதொடர்ந்து, அருண் விஜய்யை வைத்து மாஃபியா எனும் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார் கார்த்திக் நரேன். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் 21-ந் தேதி மாஃபியா படம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷின் 43-வது படத்தை அவர் இயக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். தனுஷுடன் அவர் இணையும் 5-வது படம் இதுவாகும். இப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!