கருச்சிதைவுக்காக பெண்களை குற்றம் சொல்லாதீர்கள் – கஜோல்

இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கஜோல் கருச்சிதைவுக்காக பெண்களை குற்றம் சொல்லாதீர்கள் என்று பேட்டியளித்துள்ளார்.

இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் கஜோல். இவர் தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்தார். நடிகர் அஜய்தேவ்கனை திருமணம் செய்துகொண்ட கஜோலுக்கு நைசா என்ற மகளும், யக் என்ற மகனும் உள்ளனர். கஜோல் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

‘அது 2001-ம் ஆண்டு. ‘கபி குஷி கபி கம்‘ பட காலகட்டம். அப்போதுதான் எனக்கு முதல் கருச்சிதைவு ஏற்பட்டது. படம் நன்றாக வந்திருந்தாலும் எனக்கு அது மகிழ்ச்சியான தருணமாக அமையவில்லை. அடுத்து இன்னொரு முறையும் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. முந்தைய அனுபவத்தைவிட இம்முறை அதிகம் சிரமப்பட்டேன். தாங்கமுடியாத வலி. ஆனாலும் மீண்டு வந்தேன்.

இப்போது என் கணவர் மற்றும் குழந்தைகளோடு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். கருச்சிதைவுக்கு ஆளானவர்களை, நம் நாட்டில் ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்களை தனிமைப்படுத்துகிறார்கள். குடும்பத்தினரே அசிங்கப்படுத்தி அவர்களை அவமானமாக உணர வைக்கிறார்கள்.

இது மிகவும் தவறு. கருச்சிதைவு பற்றி குடும்பத்தினர் உரையாட வேண்டும். கருச்சிதைவு என்பது எல்லோருக்கும் இயல்பாக நேர்கின்ற ஒன்றுதான். இதற்காக பெண்கள்மீது குற்றவுணர்வைச் சுமத்தாதீர்கள்’ இவ்வாறு அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!