பாலியல் புகார்கள் எதிரொலி: பொன்னியின் செல்வனில் இருந்து வைரமுத்து நீக்கமா?

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வைரமுத்து நீக்கப்பட்டுள்ளார் என்று பேச்சு கிளம்பியுள்ளது.

பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கும் படம் பொன்னியின் செல்வன். அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 10ம் தேதி பாங்காக்கில் துவங்கி நடந்து வருகிறது. ஒரு மாத காலம் அங்கு படப்பிடிப்பை நடத்துகிறார் மணிரத்னம். ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

வைரமுத்து
சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வைரமுத்து பொன்னியின் செல்வன் படத்திற்காக 12 பாடல்கள் எழுதுவதாக தெரிவித்தார். பாலியல் புகாரில் சிக்கிய வைரமுத்துவை எப்படி பாடல் எழுதச் சொல்லலாம் என்று மணிரத்னத்தையும், பொன்னியின் செல்வன் பட இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மானையும் பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படக்குழு பட்டியலில் வைரமுத்துவின் பெயர் இல்லை.

சின்மயி கோபம்
பொன்னியின் செல்வன் படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதுவதாக அறிவித்ததை பார்த்த பாடகி சின்மயி இது என்ன நியாயம் என்று கேட்டார். முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு சின்மயி மற்றும் சில பெண்கள் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தனர். அந்த புகார்களை வைரமுத்து மறுத்தார். அவர் மீது புகார் தெரிவித்தவர்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேவலப்படுத்தினார்கள். அதிலும் குறிப்பாக சின்மயியை விளாசினார்கள்.

வைரமுத்து நீக்கமா?
யார் என்ன சொன்னாலும் நியாயம் கிடைக்கும் வரை சும்மா இருக்க மாட்டேன் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் சின்மயி. கமல் 60 விழாவில் ரஜினி, கமலுடன் வைரமுத்துவை பார்த்த சின்மயி புகார் தெரிவித்தவருக்கு கெட்அவுட், ஆனால் தவறு செய்தவருக்கு எந்த பிரச்சனையுமே இல்லையே என்றார். இந்நிலையில் தான் பொன்னியின் செல்வன் படக்குழு பட்டியலில் வைரமுத்துவின் பெயர் இல்லை. பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸுடன் சேர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!