என்ன ரஜினிக்கு, இப்ப போய் இப்படி ஒரு ஆசை!

ரஜினி தான் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் குறித்து தர்பார் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.

தர்பார் விழா
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை மும்பையில் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் ரஜினிகாந்த், முருகதாஸ், சுனில் ஷெட்டி, பிரதீக் பாபர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரஜினி பதில் அளித்தார்.

திருநங்கை
ரஜினிக்கு மராத்தி மொழி படத்தில் நடிக்க ஆசையாக உள்ளதாம். எதிர்காலத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ரஜினியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் திருநங்கையாக நடிக்க வேண்டும் என்று கூறி சிரித்தார். ரஜினி பாடல் காட்சியில் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார். ஆனால் இதுவரை திருநங்கையாக நடிக்காததால் அவருக்கு அப்படி ஒரு ஆசை ஏற்பட்டுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா
குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் போராட்டம் குறித்து ரஜினியிடம் கேட்டதற்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இது சினிமா தொடர்பான நிகழ்ச்சி, இங்கு வேறு விஷயங்கள் பற்றி பேச வேண்டாமே என்று அவர் கூறினார். ரஜினி இப்படி தெரிவித்தது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வருங்கால அரசியல்வாதி
அரசியலுக்கு வருகிறேன் என்று 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த ரஜினி குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்தும், அது தொடர்பாக நடந்து வரும் போராட்டங்கள் குறித்தும் ஏன் வாய் திறக்கவில்லை என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவர் கருத்து தெரிவிக்க மறுத்ததை பார்த்தவர்கள் ரஜினி கடைசி வரை வருங்கால அரசியல்வாதியாகவே இருக்க முடிவு செய்துவிட்டார் போன்று என்று விமர்சித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!