விஷாலுக்கு தலைவலியாக மாறும் ஆர்யா?

எத்தனை நாள் தான் விஷாலுக்கு நண்பனாகவே இருப்பது என்று அவருடன் மோதிப் பார்க்க முடிவு செய்துவிட்டாராம் ஆர்யா.

ஆர்யாவும், விஷாலும் நெருங்கிய நண்பர்கள் என்பது கோலிவுட் வட்டாரத்தில் அனைவருக்கும் தெரியும். இந்த ஆண்டு இருவருமே திருமணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்யாவுக்கு மட்டும் தான் திருமணம் நடந்தது. விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அவரும், அனிஷாவும் பிரிந்துவிட்டார்கள்.

சரி, விஷயத்திற்கு வருவோம். இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் விஷாலை வைத்து படம் எடுக்கப் போகிறாராம். அந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க ஆர்யாவை கேட்டுள்ளாராம் ஆனந்த் ஷங்கர்.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடிக்க ஆர்யா ஒப்பந்தம் ஆனார். விஷால் கேட்டுக் கொண்டதால் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டதாக ஆர்யா தெரிவித்தார். ஆனால் பின்னர் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

ஆர்யா எதற்காக அந்த படத்தில் இருந்து வெளியேறினார் என்பது இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் மீண்டும் விஷால் படத்தில் வில்லத்தனம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார். இம்முறையாவது நண்பேன்டா விஷால் படத்தில் இருந்து வெளியேறாமல் இருப்பாரா ஆர்யா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முன்னதாக ஆர்யாவும், விஷாலும் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் சேர்ந்து நடித்தார்கள். தற்போது மீண்டும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!