காளிதாஸ் – விமர்சனம்

நடிகர் பரத்
நடிகை அன் ஷீத்தல்
இயக்குனர் ஸ்ரீ செந்தில்
இசை விஷால் சந்திரசேகர்
ஓளிப்பதிவு சுரேஷ் பாலா

போலீஸ் அதிகாரியாக இருக்கும் பரத், தனது மனைவி குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இந்த கேசை பரத் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அடுத்த சில நாட்களில் இதேபோன்று சில பெண்கள் இறந்துபோகின்றனர். இதையடுத்து விசாரணையில் தீவிரம் காட்டும் பரத், இது கொலையா? தற்கொலையா? என ஆராய தொடங்குகிறார்.

அசிஸ்டண்ட் கமிஷனராக இருக்கும் சுரேஷ் மேனனின் அறிவுறுத்தலின் பேரில் பரத் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யார் என்பதை அறிய இரவு பகல் பாராது சின்சியராக வேலை பார்க்கும் பரத், குடும்பத்தை சரிவர கவனிக்காமல் விடுகிறார். இதனால் அவருக்கு அவரது மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் பரத், பெண்கள் இறப்பிற்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? பரத்தின் திருமண வாழ்க்கை என்ன ஆனது? என்பது தான் இப்படத்தின் மீதிக்கதை.

நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த பரத், காளிதாஸ் படத்தில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அழகு, பதுமையுடன் இருக்கும் நாயகி அன் ஷீத்தல் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

அசிஸ்டண்ட் கமிஷனராக வரும் சுரேஷ் மேனன் தனது யதார்த்தமான நடிப்பால் கவனிக்க வைக்கிறார். ஆதவ் கண்ணதாசன் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். விறுவிறுப்பான கதைகளத்தில் போலீஸ் ஏட்டு கதாபாத்திரத்தின் மூலம் ஆங்காங்கே வரும் டைமிங் காமெடிகள் சிரிக்க வைக்கிறது.

அறிமுக இயக்குனரான ஸ்ரீ செந்தில், முதல் படத்திலேயே அசர வைக்கிறார். எந்த விதத்திலும் படம் பார்ப்பவர்களை யூகிக்க விடாமல் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர், கிளைமாக்ஸில் எதிர்பாரத டுவிஸ்ட் வைத்து அசத்தியிருக்கிறார்.

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் மனதில் பதியாவிட்டாலும், பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். சுரேஷ் பாலாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில் ‘காளிதாஸ்’ விறுவிறுப்பு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!