தூக்கில் தொங்கிடுவேன்: அஜித் படத்திற்காக ஒருவரை மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா

தூக்கில் தொங்கிடுவேன் என்று தான் ஒருவரை மிரட்டியதாக இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.

நடிப்பு ஆசை
லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் எஸ்.ஜே. சூர்யாவின் ஆசை. இதனால் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு சென்றுள்ளார். அதன் பலனாக நெத்தியடி படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் எதிர்பார்த்தது போன்று நடக்காமல் சூர்யா இயக்குநர் ஆகிவிட்டார். அஜித்தை வைத்து வாலி படம் எடுத்து இயக்குநர் அவதாரம் எடுத்தார். அந்த படத்தை எடுத்த போது நடந்த சம்பவம் பற்றி அவர் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.

வாலி ஷூட்டிங்
நடிக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். படத்தை இயக்க திட்டமிடவில்லை. ஆனால் வாலி படம் உருவானது. அது எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். வீட்டிற்குள் போன் அடிக்கும், போன் அருகே அஜித் சார் அமர்ந்திருக்கும் காட்சி தான் முதல் ஷாட். அந்த காட்சியை போட் கிளப் ரோட்டில் உள்ள பங்களா ஒன்றில் படமாக்கினோம். அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பிறகு நாளை ஷூட்டிங்கிற்கு தயாரான போது பங்களாவின் உரிமையாளர் குண்டைத் தூக்கிப் போட்டார் என்கிறார் சூர்யா.

பங்களா உரிமையாளர்
நாளைக்கு என் வீட்டிற்கு உறவினர்கள் வருகிறார்கள். அதனால் ஷூட்டிங் நடத்த முடியாது என்று பங்களா உரிமையாளர் என்னிடம் கூறினார். எனக்கு பதட்டமாகிவிட்டது. நானும் அவரிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அவர் மசியவில்லை. எல்லாம் ரெடியான பிறகு இப்படி சொல்கிறாரே என்று எனக்கு கவலையாக இருந்தது. சார், உங்களின் உறவினர்களுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் அறை புக் செய்து தருகிறேன் என்று கூட சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவர் எதையும் காதில் வாங்கவில்லை என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

தூங்கில் தொங்கிடுவேன்
பங்களா உரிமையாளர் எதற்கும் மசியவில்லை. இதையடுத்து சார், நாளைக்கு நீங்கள் கதவை திறக்கும்போது எதிர்ல இருக்கிற மரத்துல ஒருத்தரு தொங்குவாரு. அது நான் தான் என்றேன். இதை கேட்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். யாருய்யா இவன், தூக்குல தொங்குவேன் என்கிறான் என்று அதிர்ந்துவிட்டார். மேலும் அடுத்த நாள் நடக்கும் ஷூட்டிங் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொண்டு படப்பிடிப்பை நடத்த சம்மதித்தார். படத்தின் ஹீரோ யார், தயாரிப்பு நிறுவனம் எது என்று அவர் எந்த கேள்வியும் கேட்கவில்லை. அவருக்கு என் இதயத்தில் ஒரு தனி இடம் உண்டு என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!