வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனா?: என்ன சொல்கிறார் எஸ்.ஜே. சூர்யா?

வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பது பற்றி எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் போனி கபூர், வினோத் கூட்டணியில் அஜித் நடிக்கிறார். ‘வலிமை’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் உள்ள போனி கபூர் வீட்டில் நடைபெற்றது.

இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தை தவிர யார், யார் இதில் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யா, விஜய்யின் ‘மெர்சல்’ படத்திலும், ‘ஸ்பைடர்’ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். அதே போன்று வலிமை படத்தில் இவரது வில்லத்தனம் இருக்கும் என்று தகவல்கள் வந்தது. ஆனால் இதற்கு எஸ்.ஜே.சூர்யா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘வலிமை படக்குழுவினர் இது வரையில் என்னை அணுகவில்லை. ஒரு வேளை நான் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவன் என்று அவர்கள் கருதினால், வில்லனாக நடிக்க தயாராக உள்ளேன்’ என்றார்.

இதேபோல தான் வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, நஸ்ரியா நடிக்கிறார் என்று முன்பு செய்தி வெளியானது. ஆனால் அதற்கு நஸ்ரியா மறுப்பு தெரிவித்தார். இன்னும் படக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடாததால் சமூக வலைதளங்களில் பலரும் வதந்தி பரப்பி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா போனி கபூரை நேரில் சந்தித்த புகைப்படம் வெளியானது. ஆதலால் வலிமை படத்தில் நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிசுகிசுப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!