சூப்பர் ஸ்டாருடன் பரத்தை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் பிரபுதேவா

சல்மான் கான் நடித்து வரும் ராதே படத்தில் பரத் வில்லனாக நடிக்கிறார்.

பாய்ஸ் படத்தில், ஐந்து பேரில் ஒருவராக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானவர் பரத். அப்படத்திற்குப் பிறகு காதல், எம். -மகன், கண்டேன் காதலை என்று ஒரு சில வெற்றிப் படங்களைக் கொடுத்தாலும் அவரால் கோலிவுட்டில் இன்னும் டாப் ஹீரோ பட்டியலில் இடம் பிடிக்க முடியவில்லை.

2017ம் ஆண்டுக்கு பிறகு ஒரு குட்டி பிரேக் எடுத்த பரத் மீண்டும் பொட்டு படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படத்திற்கும் சரியாக வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பரத் தான் மும்பை செல்வதாகவும், புதிதாக ஒரு செய்தி வரவுள்ளது என்றும் ட்வீட் செய்தார். உடனே பரத் பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் என்று செய்தி பரவ ஆரம்பித்தது.

இந்த நிலையில் அந்த செய்தியை தற்போது பரத் உறுதி செய்துள்ளார். ஆம்… பரத் தற்போது சல்மான் கான் நடிப்பில், பிரபு தேவா இயக்கத்தில் உருவாகும் ‘ராதே’ படத்தில் நடிக்கிறார். இது குறித்து பரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘ராதே படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சல்மான் கானுடன் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. என் மீது நம்பிக்கை வைத்த பிரபு தேவா மாஸ்டருக்கு மிக்க நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கிய இப்படத்தில் வில்லனாக பரத் நடிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஒரு முறை தான் அதிர்ஷ்டம் கதவை தட்டும், அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று நெட்டிசன்கள் பரத் ட்வீட்டுக்கு கமெண்ட் செய்துள்ளனர்.

பிரபு தேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகியுள்ள தபாங் 3 படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. சல்மான் தயாரித்துள்ள அந்த படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!