சிம்பு ரசிகர்களின் ஆசை நிறைவேறிடுச்சு: விரைவில் துவங்கும் ‘மாநாடு’

மாநாடு படத்தில் சிம்பு நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் சிம்பு நடிக்கிறார் என்று அறிவித்தார்கள். அதன் பிறகு சிம்பு சொன்னபடி படிப்பிடிப்புக்கு வராததால் அவரை படத்தில் இருந்து நீக்குவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

இந்நிலையில் சிம்பு தான் மாநாடு படத்தில் நடிக்கிறார் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் காமாட்சி சிம்புவை சந்தித்து பேசியபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, விரைவில் மாநாடு படப்பிடிப்பு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மாநாடு படத்தில் இருந்து நீக்கப்பட்ட வேகத்தில் மகா மாநாடு என்கிற படத்தை தானே இயக்கி, நடிக்கப் போவதாக சிம்பு அறிவித்தார். அதுவும் மெகா பட்ஜெட்டில் படத்தை எடுக்கப் போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து சிம்புவையே மாநாடு படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சிம்புவின் அம்மா உஷா, தன் மகன் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வந்து நடித்துக் கொடுப்பார் என்று வாக்குறுதி அளித்தார்.

அதன் பிறகே சுரேஷ் காமாட்சி, சிம்பு சந்திப்பு நடந்துள்ளது. அம்மா கொடுத்த வாக்கை காப்பாற்ற சிம்பு மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. எது எப்படியோ, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க வேண்டும் என்கிற அவர் ரசிகர்களின் ஆசை நிறைவேறப் போகிறது.

முன்னதாக சிம்புவை படத்தில் இருந்து நீக்கியதாக அறிவிப்பு வெளியானதை பார்த்த ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடம் கோரிக்கை ஒன்றை வைத்தனர். அதாவது, சுரேஷ் காமாட்சியை நீக்கிவிட்டு வேறு தயாரிப்பாளரை வைத்து சிம்புவுடன் மாநாடு வேலைகளை துவங்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!