சுஜித் பெற்றோருக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

பெற்றோர் இல்லாத குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் படி சுஜித் பெற்றோருக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த 25ம் தேதி மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் சுஜித் என்ற 2 வயது குழந்தை தவறுதலாக விழுந்தது.

5 நாட்களாக போராடியும் சுஜித்தை உயிரோடு மீட்க முடியவில்லை. அவரது உடல் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது. 2 வயதில் ஒரு குழந்தை உயிருக்கு போராடி இறந்த சம்பவம் தமிழக மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஆதங்கத்தையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ராகவா லாரன்ஸ் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘குழந்தை சுஜித்தின் மரணத்தால் இன்று அக்டோபர் 29 எனது பிறந்த நாளை கொண்டாட மனம் வரவில்லை. ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டு சென்றுவிட்டான் சுஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது.

இந்நிலையில் சுஜித்தின் பெற்றோருக்குச் சொல்ல விரும்புவது.. சுஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். இந்த தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுஜித் எனப் பெயரிட்டு வளர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அதன் மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்க்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுஜித்தின் ஆத்மா சாந்தியடையும், சுஜித்தும் தங்களுடனே இருப்பான். அப்படி நீங்கள் குழந்தையை தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையை தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!