2.0 இசை வெளியீட்டு விழாவிற்காக ரஜினி துபாய் பயணம்!!!


லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. ஏ.ஆர். ரகுமான் இசையில் பிரமாண்டமாக தயாராகி உள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது.

நாளை (வியாழக்கிழமை) மாலை ரஜினிகாந்த், இயக்குனர் ‌ஷங்கர், அக்‌ஷய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பிரமுகர்கள் அவர்கள் தங்கியுள்ள ஓட்டலில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக 7 நட்சத்திர ஓட்டலான பியூரிஜ்- அல்- அரப் செல்கின்றனர்.


அங்கு 2.0 படத்திற்கான உலகளாவிய பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறு”கிறது. 2.0 படத்தின் இசை வெளியீடு பியுரிஜ் பார்க்கில் வருகிற 27-ந்தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. முதன் முறையாக இதற்கு துபாய் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

12 ஆயிரம் பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இதன் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் நிகழ்ச்சியை கண்டு ரசிக்க முடியும். துபாய் மன்னர் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து ரஜினிகாந்த் விமானம் மூலம் துபாய் செல்கிறார். கமல்ஹாசனுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் துபாய் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!