‘தீரன் அதிகாரம் ஒன்று’.. சில காட்சிகளும், சில சொற்களும் நீக்கப்பட்டுள்ளது..!!


‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதனை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்கி இருந்தார். இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இதில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை தவறாக சித்திரித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. ஆகவே படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், ‘இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்தை வைத்து மட்டுமே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் தவறாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் சித்தரிக்கவில்லை. எந்த ஒரு சமுதாயமும் கொலை, கொள்ளையை குலத் தொழிலாகக் கொண்டு வாழவில்லை. அப்படி ஒரு சித்தரிப்பு இந்தப் படத்தில் காட்டப்படவில்லை.

இருப்பினும், மக்கள் மனம் புண்படும்படி இருப்பதாகக் கருதுவதால், அதற்காக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படக்குழு சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு, வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இனிவரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணையதள ஒளிபரப்பு ஆகியவற்றில் இருந்து ‘குற்றப் பரம்பரை’ என்ற சொல் மற்றும் புத்தக காட்சி நீக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#