பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

1966 ஆம் ஆண்டு வெளியான நாம் மூவர் படத்திற்கு வசனம் எழுதி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய மகேந்திரன்.

தொடர்ந்து பல படங்களுக்கு கதை, வசனம் எழுதி வந்த நிலையில், 1978 ஆம் ஆண்டு வெளியான முள்ளும் மலரும் படம் இயக்குநராக அறிமுகமானர்.

அப்படத்தை தொடர்ந்து உதிரிப்பூக்கள், ரிஷிமூலம், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார்.

இறுதியாக 1992 ஆம் ஆண்டு வெளியான ஒரு பஞ்சாயத்து படம் தான் அவர் இயக்கிய கடைசி திரைப்படமாகும். அதன் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தவர், 2004 ஆம் ஆண்டு வெளியான காமராஜ் படம் மூலம் நடிகராக சினிமாவில் பயணிக்க தொடங்கினார்.

விஜயின் தெறி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர், தொடர்ந்து நிமிர், மிஸ்டர்.சந்திரமெளலி, சீதக்காதி, பேட்ட, பூமராங் ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

இதற்கிடையே, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மகேந்திரனின், வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று சற்று நேரத்திற்கு முன்பு இயக்குநர் மகேந்திரன் தன்னுடைய 79 வயதில் அவரது வீட்டில் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 10 மணிக்கு வைக்கப்படுகிறது. இறுதிச் சடங்கு மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகேந்திரனுக்கு ஜான் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.