கன்னட நடிகரைத் தாக்கிய வழக்கு…வலைவீசும் போலீஸ்…தலைமறைவான விமல்…

குடிபோதையில் கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கிய வழக்கில் தன்னை போலீஸார் வலைவீசித் தேடிவருவதால் தனது வீட்டிலிருந்து எஸ்கேப்பாகியுள்ளார் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ நாயகன் விமல். அவரது இருப்பிடத்தைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் விருகம்பாக்கம் போலீஸார்.

பெங்களூரு ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் அபிஷேக். கன்னட நடிகரான இவர், தமிழில் “அவன் அவள் அது” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதற்காக சென்னை விருகம்பாக்கம் பாஸ்கர் காலனி 2-வது தெருவில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு அந்த குடியிருப்பின் நுழைவு வாயில் பகுதியில் அபிஷேக் அமர்ந்திருந்த போது, நடிகர் விமல் தனது நண்பர்கள் 4 பேருடன் மதுபோதையில் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. அபிஷேக்கை குடியிருப்பின் வரவேற்பறை ஊழியர் என நினைத்து விமல் அறை கேட்டதாகவும், இதனால் அபிஷேக் கோபமுற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்படவே நடிகர் விமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கன்னட நடிகர் அபிஷேக்கை அடித்து உதைத்ததாகவும் சொல்லப்படுகிறது. காயம்பட்ட அபிஷேக், சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், தாக்குதல் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் ஆபாசமாக திட்டுதல் என்ற பிரிவின் கீழ் நடிகர் விமல் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் விமல் படபிடிப்பைக் காரணம் காட்டி வெளியூருக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. விமலைக் கைது செய்து விசாரிப்பதற்காக, படப்பிடிப்பே நடக்காத அந்த லொகேஷன் பற்றிய விபரங்களை விருகம்பாக்கம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.