ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கடந்த 14-ந் தேதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதில் கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் உயிரிழந்தனர்.
இவர்களது குடும்பங்களுக்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.
குண்டுவெடிப்பில் இறந்த அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் குடும்பத்தினரைச் சந்தித்த நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ரூபாய் 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
பின்னர் ‘ரோபோ’ சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘நான் சினிமாக்காரன். என்னிடம் சினிமா சார்ந்த விஷயங்களை இந்த இடத்தில் எதுவும் கேட்க வேண்டாம். நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டிற்கு வந்திருக்கிறேன்.
’இன்றைக்கு நாம் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறோம் என்றால் அதற்கு இவர்களைப் போன்ற எல்லைசாமிகள் தான் காரணம். இன்றைக்கு நமது தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்களை நாம் இழந்து நிற்கிறோம். இது ஈடுகட்ட முடியாத இழப்பாகும்.
இக்குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்பதே தெரியவில்லை. சிவசந்திரனால் மட்டுமே இந்த குடும்பம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர் பிரிவு என்பது ஈடுசெய்ய முடியாதது. இந்தக் குடும்பத்துக்கு என்னால் ஆன சிறு உதவியை வழங்க எண்ணினேன்.
அவரது தாயாரிடம் பேசும்போது என் மகன் நாட்டுக்காக உயிரை விட்டுள்ளார். அது எனக்கு பெருமைதான் என அவர் தாய் கூறும்போது பெருமையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.