இயற்கை விவசாயத்தைப் பற்றிப் பேசும் ‘குத்தூசி’ விமர்சனம்

நடிகர் திலீபன்
நடிகை அமலா ரோஸ்
இயக்குனர் சிவசக்தி
இசை என்.கண்ணன்
ஓளிப்பதிவு பாகீ
படித்துமுடித்து வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் திலீபன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், நிலத்தையெல்லாம் விற்றுவிட்டு தனது பெற்றோரையும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார். திலீபனும், நாயகி அமலா ரோசும் காதலித்து வருகிறார்கள்.

இதற்கிடையே திலீபனின் அப்பா இறந்துவிட, இரண்டு முக்கிய நிகழ்வுகள் அவரது வாழ்க்கையையே மாற்றுகின்றன. தனத சொந்த ஊரில் உள்ளவற்றையே தன்னால் சரிசெய்ய முடியவில்லையே என்று யோசிக்கும் திலீபன், நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான் என்பதை உணர்ந்து, தனது வெளிநாட்டு ஆசையை விட்டுவிட்டு, விவசாயத்தை பாதுகாக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

கடைசியில், விவசாயத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார்? அவரது முயற்சிக்கு எதுவெல்லாம் தடையாக வந்தது? திலீபன் – அமலா ரோஸ் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஒரு சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த இளைஞனாக திலீபன் கதைக்கு சரியாக பொருந்தியிருக்கிறார். அமலா ரோசுக்கு அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும், கொடுத்த கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். யோகி பாபு, ஜெய பாலன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஒட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.

வெளிநாடு செல்ல துடிக்கும் இளைஞன் ஒருவன், தனது ஊர் பிரச்சனைக்காக தனது ஆசையை விட்டுவிட்டு விவசாயத்தை பாதுகாக்கும் முயற்சியில் இறங்குவதை படமாக்கியிருக்கிறார் சிவசக்தி. இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும், படித்த, படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும். இயற்கை விவசாயத்தை மீட்க இளைஞர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதை உணர்த்தும்படியாக இயக்கியிருக்கிறார்.

என்.கண்ணனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பாகீயின் ஒளிப்பதிவில் விவசாய கிராமத்தை அழகாக காட்டியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் `குத்தூசி’ பாதுகாக்க வேண்டியது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.